நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் கோடிக்கணக்கான ரூபாய் வீணாகியுள்ளது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று வேதனை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம், புதியவேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி உள்ளன.
கடந்த ஜூலை 19 முதல் 30-ம்தேதி வரை மக்களவையின் அலுவல் நேரமான 54 மணி நேரத்தில் சுமார் 7 மணி நேரம் மட்டுமே அவை செயல்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதித்தனர். இதுபோல் மாநிலங்களவையில் மொத்த அலுவல் நேரமான 53 மணி நேரத்தில் 11 மணி நேரம் மட்டுமே அவை செயல்பட அனுமதித்தனர். 2 அவைகளிலும் 89 மணி நேரம்வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.133 கோடிக்கு மேல் வீணாகியுள்ளது.
மக்களவையில் உறுப்பினர்கள் நேற்றும் அமளியில் ஈடுபட்டதால் அவை அலுவல் முடங்கியது.
இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று கூறும்போது, "மக்களவை செயல்பாடுகளில் ஏற்பட்ட இடையூறு காரணமாக மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் வீணாகியுள்ளது. மக்களவை என்பது, மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை முன்வைப்பதற்கான இடமாகும்.
நீங்கள் அனைவரும் அவையின்மரியாதைக்குரிய உறுப்பினர்கள். நாட்டுக்கும் சமூகத்துக்கும் உங்களின் நடத்தை வழிகாட்டுவதாக இருக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் உறுப்பினர்கள் இருக்கைக்கு திரும்ப வேண்டும். கோஷம் போடுவது, கூக்குரலிடுவது போன்ற செயல்கள் அவையின் கவுரவம் மற்றும் அரசிய லமைப்பு மரபுகளுக்கு ஏற்புடை யதல்ல’’ என்றார். - பிடிஐ