ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் கரோனா 3-வது அலையை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது. நாள்தோறும் ஒரு லட்சம் பேருக்கு குறையாமல் பாதிக்கப்படுவார்கள், அதிகபட்சமாக 1.50 லட்சம்வரை பாதி்க்கப்படலாம் என்று ஐஐடி வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்தில் கரோனா 3-வது அலை தொடங்கினால், அக்டோபர் மாதத்தில் உச்சத்தில் இருக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஹைதராபாத் ஐஐடி ஆய்வாளர்கள் மதுகுமளி வித்யாசாகர், கான்பூர் ஐஐடி ஆய்வாளர் மனிந்திரா அகர்வால் இருவரும் கணித முறை அடிப்படையில் கரோனா 3-வது அலையை கணித்துள்ளனர். இவர்களின் கணிப்பின்படி கரோனா 3-வது அலை ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து ஹைதராபாத் ஐஐடி ஆய்வாளர் வித்யாசாகர் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ ஆகஸ்ட் மாதத்தில் கரோனா 3-வது அலை வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன, அவ்வாறு ஏற்பட்டால் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையும். கேரளா, மகாரஷ்டிாரவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, 3-வது அலை உருவாகலாம்.
ஆனால், 2-வது அலையைப் போன்று, அதில் இருந்த பாதிப்பு அளவுக்கு 3-வது அலையில் இருக்காது. 2-வது அலையில் அதிகபட்சமாக 4லட்சம் வரை பாதிக்கப்பட்டனர். ஆனால், 3-வது அலையில் ஒரு லட்சம் முதல் அதிகபட்சமாக 1.50லட்சம் வரை பாதிக்கப்படலாம். எங்கள் கணிப்பின்படி ஜூன் மாதம் இறுதியில் நாட்டில் 20 ஆயிரம்பேர்வரை தினசரி பாதிக்கப்பட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
கரோனா 2-வது அலை ஏற்படுவது குறித்து இரு ஆய்வாளர்களும் கணித ரீதியிலான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வெளியி்ட்டனர். அந்த அறிக்கையில் குறிப்பிட்டது போன்று ஏறக்குறைய பாதிப்பு 2-வது அலையில் இருந்தது.
இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 41,831 பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்,541 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள் தொற்று அதிகரித்துவருவதால், அங்கு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இந்தியாவில் பரவிவரும் டெல்டா வகை வைரஸ், வேகமாக பரவும் தன்மைகொண்டது. சின்னம்மைபோல் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.