நாடாளுமன்றத்தில் பெகாசஸ் பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் திங்கள் கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர்.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது முதலேயே இந்த விவகாரத்தை எழுப்பி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் தவறேதும் நடைபெறவில்லை என மத்திய அரசு மறுத்து வருகிறது.
எனினும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெகாசஸ் உட்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மழைகாலக் கூட்டத் தொடர் தொடங்கியது முதலே அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றும் பெகாசஸ் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. மக்களைவையில் கேள்வி நேரத்துக்கு பின்பு பெகாசஸ் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியது. அடுத்தடுத்து 2 முறை அவை ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதுபோலவே மாநிலங்களவையிலும் இன்று காலை தொடங்கியது முதலேயே எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரத்தை எழுப்பின. நண்பகல் 12.00 வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியதும் அமளி நீடித்ததால் அவை ஆகஸ்ட் 2-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.