இந்தியா

400 லட்சம் டன் உணவு தானியங்கள் விநியோகம்

செய்திப்பிரிவு

பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 400 லட்சம் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் நேற்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக அளித்தபதிலில் கூறியிருப்பதாவது:

கரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவ்வப்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனைக் கருத்தில்கொண்டு, ‘பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாதந்தோறும் ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியம் என்ற வீதத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஜூலை 14-ம்தேதி வரையிலான காலகட்டத்தில், சுமார் 400.70 லட்சம் டன் உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 600.814 லட்சம் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.-பிடிஐ

SCROLL FOR NEXT