மக்களின் மனதை, தேசத்தின் மனதைப் புரிந்து கொண்டீர்களா, கரோனா தடுப்பூசி எங்கே என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிறன்று பிரதமர் மோடி மக்களுக்கு வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். அதைக் குறிப்பிட்டும், நாட்டில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஏன் வேகப்படுத்தப்படவி்ல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்வி்ட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்து, வரைபடங்களையும் பகிர்ந்துள்ளார்.அதில், நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாக நடந்து வருகிறது. நாட்டில் பெருவாரிய மக்களுக்கு தடுப்பூசி போதுமான அளவு கிடைக்கவில்லை என்று ஊடகங்கள் வாயிலாகத் தெரியவருகிறது.
கரோனா 3-வது அலையைத் தடுக்க நாட்டில் 60 சதவீதம் மக்களுக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் குறைந்தபட்சம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கவேண்டும்.
அதற்கு நாள்தோறும் நாட்டில் 93 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால் தற்போது கடந்த ஒரு வாரத்தில் சராசரியாக 36 லட்சம் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது ஏறக்குறைய கடந்த ஒருவாரத்தில் நாள்தோறும் 56 லட்சம் டோஸ் தடுப்பூசி குறைவாகச் செலுத்தப்படுகிறது.
24ம் தேதி மட்டும் நாட்டில் 23 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, 69 லட்சம் தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கிறது என்று ராகுல் காந்தி பதிவிட்ட வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி ட்விட்டரில் “வேர் ஆர் வேக்ஸின்” என்ற ஹேஸ்டேக்கோடு பதிவிட்ட கருத்தில் “ இந்தத் தேசத்தின் மனதை, மக்களின் மனதை புரிந்து கொண்டவராக இருந்திலுந்தால், தடுப்பூசி செலுத்தும்நிலை இப்படி இருந்திருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.