நடிகை ஷில்பா ஷெட்டி, அவரின் கணவர் ராஜ் குந்த்ரா | படம் உதவி: ட்விட்டர். 
இந்தியா

ஆபாசப் படங்கள் எடுத்த வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டிக்குத் தொடர்பா? கைதாவதிலிருந்து தப்பிக்க ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுத்த ராஜ் குந்த்ரா 

ஏஎன்ஐ

பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்த நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தான் கைது செய்யப்படாமல் இருப்பதைத் தவிர்க்க மும்பை போலீஸாருக்கு ரூ.25 லட்சம் வரை லஞ்சம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மும்பை ஊழல் தடுப்பு போலீஸாருக்கு 4 மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

வெப் சீரிஸ் எடுக்கிறேன் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், இதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்துப் பதிவேற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரைக் கடந்த திங்கள்கிழமை இரவு மும்பை போலீஸார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜ் குந்த்ராவை 27-ம் தேதிவரை போலீஸார் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களைத் தவறாகச் சித்தரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆபாசப் படங்கள் எடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் போலீஸார் தன்னைக் கைது செய்வதிலிருந்து தப்பிக்க ரூ.25 லட்சம் வரை ராஜ் குந்த்ரா லஞ்சம் கொடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மும்பை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், “யாஷ் தாக்கூர் என்பவரிடம் இருந்து 4 மின்னஞ்சல்கள் எங்களுக்கு வந்துள்ளன. அதில் ராஜ் குந்த்ரா எப்போதெல்லாம் போலீஸாருக்கு லஞ்சமாகப் பணம் கொடுத்துள்ளார் என்ற தகவல் உள்ளது.

தன்னை போலீஸார் கைது செய்யாமல் இருக்க ஏறக்குறைய ரூ.25 லட்சம்வரை ராஜ் குந்த்ரா லஞ்சம் கொடுத்துள்ளார். இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. மின்னஞ்சலின் உண்மைத் தன்மை குறித்தும் விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

மும்பை குற்றப்பிரிவு போலீஸ் இணை ஆணையர் மிலிந்த் பரம்பே கூறுகையில், “லண்டனைச் சேர்ந்த நிறுவனம், ஆபாசப் படங்கள் தயாரிப்பில் ராஜ் குந்த்ராவுடன் இணைந்து செயல்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. புதிய நடிகர், நடிகைகளுக்கு வெப்சீரிஸில் நடிக்க வாய்ப்பு வழங்குகிறோம் எனக் கூறி அவர்களை ஆபாசப் படங்களில் நடிக்க ராஜ் குந்த்ரா பயன்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சில நடிகைகள் மும்பை போலீஸாரை அணுகி அளித்த புகாரின் பெயரிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் நடிகை ஷில்பா ஷெட்டிக்குத் தொடர்பு இருக்கிறதா என இதுவரை தெரியவில்லை, விசாரித்து வருகிறோம்.

விசாரணையில் ராஜ் குந்த்ராவின் நிறுவனம், லண்டனில் உள்ள கென்ரின் நிறுவனத்துடன் செயலி தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. பெண்களின் நிர்வாணப் படங்கள் தயாரிக்கப்பட்டு, லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புகாருக்குப் பின் கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆகியவற்றிலிருந்து அந்தச் செயலி நீக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT