கரோனா பெருந்தொற்று 2-வது அலையின்போது, ஆக்சிஜன் ஏற்றுமதியை 70 சதவீதம் அதிகரித்தது மத்திய அரசு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கரோனா 2-வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த மாநிலத்திலும் யாரும் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்ததற்கு பிரியங்கா காந்தி பதில் அளித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் மாநிலங்களவையில் நேற்று எழுத்துபூர்வமாக பதில் அளித்தபோது, “கரோனா 2-வது அலையில் நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையிலிருந்து தெரியவருகிறது. சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் வருவது, மாநில அரசுகளுக்கு உட்பட்டது. அவர்கள் அளித்த தகவலின்படி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நடக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
கரோனா 2-வது அலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில் மத்திய அமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தில் தவறான தகவலை அளித்தமைக்காக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், ''ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், கரோனா 2-வது அலையில் உயிரிழப்புகள் நடந்தன.
2-வது அலையின்போது, ஆக்சிஜன் ஏற்றுமதியை 700 சதவீதம் மத்திய அரசு அதிகரித்தது. கரோனா 2-வது அலையின்போது, ஆக்சிஜன் வழங்குவதற்குப் போதுமான சிலிண்டர்களை மத்திய அரசு வழங்காததால், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தனர்.
அதிகாரமிக்க குழு மற்றும் நாடாளுமன்றக் குழுவின் அறிவுரைகள் புறக்கணிக்கப்பட்டன. ஆக்சிஜன் சப்ளைக்கு எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் பார்க்கவில்லை” என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.