இந்தியா

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்: அமரிந்தர் எதிர்ப்புக்கு மத்தியில் மேலிடம் நடவடிக்கை

ஏஎன்ஐ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டுள்ளார். அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங்கின் கடும் எதிர்ப்பையும் தாண்டி கட்சி மேலிடம் சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமித்துள்ளது.

அவருடன் சங்கத் சிங் கில்சியான், சுக்வீந்தர் சிங் டேனி, பவன் கோயல், குல்ஜித் சிங் நக்ரா ஆகியோர் மாநில காங்கிரஸ் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனை, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முடிவுக்கு வந்தது சிக்கல்:

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்தது. முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கு எதிராக மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வந்தார். வெளிப்படையாகவே முதல்வர் அமரிந்தர்சிங்கை சித்து கடுமையாக விமர்சித்து வந்தார்.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் கட்சியை மேலும் பலவீனமாக்கியது.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு ஆதரவாக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும், சித்துவுக்கு ஆதரவாகச் சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களும் என இரு பிரிவாகச் செயல்பட்டனர்.

இந்நிலையில் இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கட்சி மேலிடம் தலையிட்டது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, முதல்வர் அமரிந்தர் சிங்கும், நவ்ஜோத் சிங் சித்துவும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்புக்குப்பின், மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகரை அவரின் இல்லத்தில் நேற்று சந்தித்து நவ்ஜோத்சிங் சித்து நீண்ட ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்குப்பின், மாநிலத்தில் உட்கட்சிபூசலை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்படலாம் என்றும், அவருக்குத் துணையாக 4 செயல்தலைவர்களும் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT