கர்நாடகாவில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது.
கபிலா ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதிகளில் மழை பெய்வதால் கபிலா ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் காவிரி, கபிலா ஆற்றின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய காவிரி நீர்ப் பாசன அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, மண்டியாவில் 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கியுள்ளது.
அணைக்கு விநாடிக்கு 19,696 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 2,226 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மைசூரு மாவட்டத்தில் கபினி அணையின் நீர்மட்டம் 2,281.98 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 19, 632 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 9 ஆயிரத்து 552 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த இரு அணைகளில் இருந்தும் மொத்தமாக விநாடிக்கு10 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக காவிரி நீர்ப்பாசன கழகம் தெரிவித்துள்ளது.