கேரளாவில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. ஜிகா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் கரோனா வைரஸ் 2-வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜிகா வைரஸ் பாதிக்கப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சலும் பரவுகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படலாம். இதனால் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவும் கூட சில நேரங்களில் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருக்கும் பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் அறிகுறிகள் காணப்படும். இதுவரை ஜிகா வைரஸுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கேரளாவில் கடந்த மாதம் சிகிசைக்கு வந்த 24 வயதான கர்ப்பிணி பெண்ணுக்கு காய்ச்சல், தலைவலி, தோலில் தடிப்புகள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கேரளாவில் ஜிகா வைரஸ் பரவியதை தொடர்ந்து 6 பேர் கொண்ட மத்திய குழு அம்மாநிலம் சென்று ஆய்வு செய்தது.
கேரளாவில் ஏற்கெனவே 18 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களது ரத்த மாதிரிகள் புனே அனுப்பப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் 2 பேருக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:
கேரள மாநிலத்தில் ஏற்கெனவே மொத்தம் 18 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. தற்போது மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பூந்துராவை சேர்ந்த 41 வயது நபர். மற்றொருவர் சாத்தமங்கலத்தைச் சேர்ந்த 35 வயது நபர் ஆவார்.
இவர்களின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல நடவடிக்கைளை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.