இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து மழை கொட்டித் தீர்ப்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பரவலமாக மழை பெய்கிறது. அதுபோலவே வட மாநிலங்களிலும் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்கிறது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மின்னல் மற்றும் பலத்த மழையில் சிக்கி 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுபோலவே இமாச்ச பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு நேற்று மேகவெடிப்பு ஏற்பட்ட பலத்த மழை கொட்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள், விடுதிகள் சேதமடைந்தன. கடைகள் சேதமடைந்தன. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சிம்லா மாவட்டத்தின் ராம்பூர் பகுதியில் ஜாக்ரி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. டேராடூன் மாவட்டத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் சிக்கி கொண்டவர்களை பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் கணித்துள்ளது. ஜூலை 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சமவெளி மற்றும் மலைகளில் கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு வானிலை எச்சரிக்கையும், ஜூலை 14 மற்றும் 15 ஆம் தேதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் வாகனங்கள், கட்டிடங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதனுடன் பெரிய அளவில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை கொட்டித் தீர்ப்பதால் மீட்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மணாலி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகள் பல இடங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது.