இந்தியா

உ.பி.யில் 41 பேர் மின்னல் தாக்கி உயிரிழப்பு; ராஜஸ்தானில் செல்பி எடுத்தவர்களும் பலி

செய்திப்பிரிவு

உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் ராஜஸ்தானில் செல்பி எடுத்த சுற்றுலா பயணிகளும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதுதொடர்பாக தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையமும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பரவலமாக மழை பெய்கிறது. அதுபோலவே வட மாநிலங்களிலும் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்கிறது. உத்தர பிரதேசத்தில் பிரயாகராஜ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மின்னலுடன் மழை கொட்டியது. இதில் 14 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அதுபோலவே கான்பூர், தேஹத், பதேபூரில், கவுசாம், பிரோசாபாத், உன்னாவ், ஹமீர்பூர், சோன்பத்ரா, பிரதாப்கர் மிர்சாபூர் என பல இடங்களிலும் பலத்த மின்னலுடன் மழை பெய்தது.

உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கியதன் காரணமாக 41 பேர் இறந்துள்ளனர். ஆடு, பசு என கால்நடைகளும் கொல்லப்பட்டு உள்ளன.இதுபோலவே மத்திய பிரதேசத்தில் ஏழு பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதுபோலவே ராஜஸ்தானில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அங்கு வெவ்வேறு சம்பவங்களில் மின்னல் தாக்கி 7 சிறுவா்கள் உள்பட 20 போ் பலியாகினா். 21 போ் காயமடைந்தனா்.

அவர்களில் 11 பேர் சுற்றுலா பயணிகள் ஆவர். ஜெய்ப்பூரில் அம்பர் கோட்டை அருகே மலை பகுதியில் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்கள் உட்பட பலர் செல்பி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் 11 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

SCROLL FOR NEXT