இந்தியா

பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியை சந்திக்கவில்லை: டிஎம்சி புகாருக்கு துஷார் மேத்தா மறுப்பு

செய்திப்பிரிவு

ஊழல் வழக்கில் தொடர்புடைய மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியை சந்தித்ததாக திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சி கூறியுள்ள குற்றச்சாட்டை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மறுத்துள்ளார்.

மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி மீதான பல்வேறு ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளில் சிபிஐ தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி உள்ளார். இந்நிலையில், துஷார் மேத்தாவை சுவேந்து அதிகாரி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசியதாக செய்திகள் வெளியாயின. இதைத் தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் துஷார் மேத்தாவை சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘வியாழக்கிழமையன்று எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை சந்திக்க சுவேந்து அதிகாரி வந்தார். ஆனால், அப்போது ஏற்ெகனவே திட்டமிட்டசந்திப்புகளில் நான் ஈடுபட்டிருந்ததால், அவரை காத்திருக்குமாறு உதவியாளர் மூலம் கூறினேன். கூட்டம் முடிந்ததும், அவரை சந்திக்க முடியாத சூழ்நிலை இருப்பதை உதவியாளர் மூலம் தெரிவித்தேன். இதையடுத்து, என்னை சந்திக்காமல் சுவேந்து அதிகாரி சென்று விட்டார். இதனால், அவரை நான் சந்தித்தேன் என்ற கேள்வியே எழவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT