திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த பெண் எம்.பி.யும், நடிகையுமான மிமி சக்கரவர்த்தி போலி தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரது உடல்நலம்பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் நடிகை மிமி சக்கரவர்த்தி. இவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தற்போது ஜாதவ்பூர் மக்களவை தொகுதி எம்.பி.யாக உள்ளார். கொல்கத்தாவில் அண்மையில் கரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் நடிகை மிமி சக்கரவர்த்தியும் ஒருவர். இந்நிலையில் மிமிக்கு நேற்று காலையில் வயிற்று வலி, ரத்த அழுத்தக் குறைவு, நீர்ச்சத்து குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. இதையடுத்து அவர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
இந்நிலையில், மிமி பங்கேற்ற கரோனா தடுப்பூசி முகாம் போலியானது என்றும், அந்த மருந்தும் போலியானது என்றும் தெரியவந்துள்ளது. தேபஞ்சன் தேவ் என்ற பெயரில் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்ட நபர் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்து மோசடி செய்துள்ளார். கரோனா வைரஸ் தடுப்பூசி என்ற பெயரில் அவர் செலுத்தியது வெறும் எதிர்ப்பாற்றல் தரும் மருந்துகள் மட்டுமே என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தேபஞ்சன் தேவ் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.
போலி தடுப்பூசி போட்டு இவர்கள் இதுவரை ரூ.1 கோடி வரை பணம் வசூலித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதேபோல் மும்பையில் 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டு ரூ.12 லட்சம் வரை ஒரு கும்பல் சுருட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ