இந்தியா

கச்சா எண்ணெய் விலை ஏற்றம்: ஒபெக் நாடுகளிடம் கவலை தெரிவித்தார் தர்மேந்திர பிரதான்

செய்திப்பிரிவு

கச்சா எண்ணெய் விலைகள் குறித்து பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் தலைமை செயலாளரிடம் தர்மேந்திர பிரதான் கவலை தெரிவித்தார்.

ஒபெக் எனப்படும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் தலைமை செயலாளர் டாக்டர் முகமது சான்சுய் பர்கிண்டோவுடன் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதான் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.

அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைகள் குறித்தும், நுகர்வோர் மற்றும் பொருளாதார மீட்சி மீது அவை ஏற்படுத்தும் பாதிப்பு குறித்தும் கூட்டத்தின் போது அமைச்சர் கவலை தெரிவித்தார். உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைகள் இந்தியாவின் மீது பணவீக்க அழுத்தத்தை அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார்.

எண்ணெய் சந்தையின் சமீபத்திய முன்னேற்றங்கள், எண்ணெய் தேவை மீட்சி, பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்புகள், எரிசக்தி சவால்களை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களை இருதரப்பும் விவாதித்தனர்.

உற்பத்தி கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும், நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய் விலையை நியாயமான அளவில் வைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் நுகர்வு சார்ந்த மீட்சி ஏற்படும் என்றும் பிரதான் தெரிவித்தார்.

கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் போது மருந்துகள், ஐஎஸ்ஓ கொள்களன்கள், திரவ மருத்துவ ஆக்சிஜன் மற்றும் முக்கிய பெட்ரோலிய பொருட்களை வழங்கியதற்காக பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் தலைமை செயலாளர் டாக்டர் முகமது சான்சுய் பர்கிண்டோ மற்றும் முக்கிய கூட்டு நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதான் நன்றி தெரிவித்தார். 2021-ல் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று கூறிய ஒபெக் ஆய்வு குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஒபெக்குடன் தொழில்நுட்ப கூட்டுறவு, நிபுணர்கள் பரிமாற்றம் மற்றும் இதர கூட்டுகளை இந்தியா விரிவுபடுத்தி வருகிறது.

SCROLL FOR NEXT