அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் இறுதி வாக்குமூலத்தை சமர்ப்பிப்பதற்காக இன்று மீண்டும் ஆஜரானர்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘‘ஏன் திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் மோடி என்ற பெயர் இருக்கிறது. நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி " என்று பேசியதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்ககோரி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணையின்போது ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அவதூறாக ஏதும் பேசவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதன் பிறகு வழக்கு விசாரணை கால இடைவெளியில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தனது இறுதி வாக்குமூலத்தை சமர்ப்பிப்பதற்காக ஜூன் 24-ந் தேதி (இன்று) ராகுல் காந்தி மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி ராகுல் காந்தி இன்று நேரில் ஆஜரானார்.