இந்தியா

ஒரே நாளில் 69 லட்சம் பேருக்கு தடுப்பூசி: கரோனா ஒழிப்பில் இந்தியா புதிய மைல்கல்

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 69 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது இந்திய தேசம் கரோனாவுக்கு எதிராக மேற்கொண்டுள்ள போரில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து பல்வேறு மாநிலங்களும் புகார் கூறிவந்த நிலையில் ஜூலை 21ம் தேதி முதல் மூன்று வாரங்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மத்திய அரசின் சார்பில் இலவச கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று முதல் கரோனா தடுப்பூசி வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடக்கிவைத்தது.

இந்நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்க்குக் கடந்த 24 மணி நேரத்தில், 69 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி பெற்றுள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 2ம் தேதி ஒரே நாளில் 42,65,157 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதே அதிகப்படியான எண்ணாக இருந்தது.

இது தொடர்பாக இன்று காலை பிரதமர் மோடி தனது ட்வீட்டில், அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டம் இன்று முதல் தொடங்குகிறது. இந்தியாவின் இந்த தடுப்பூசித் திட்டத்தின் மிகப்பெரிய பயனாளியாக ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் மற்றும் இளைஞர்கள் இருப்பர். நாம் ஒவ்வொருவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உறுதியேற்க வேண்டும். நாம் ஒன்றிணைந்தால் கரோனாவை விரட்டலாம் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஒவ்வொரு மாநிலமுமே அன்றாடம் தடுப்பூசி செலுத்தப்படுவோரின் எண்ணிக்கை குறித்து இலக்கு நிர்ணயித்துள்ளது. அசாமில், அடுத்த 10 நாட்களில் 3 லச்டம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அன்றாடம் 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மாநிலங்களுக்கு 29.10 கோடி (29,10,54,050) தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிதுள்ளது.

இன்றைய நிலவரப்படி மாநிலங்களின்வசம் 3.06 கோடி தடுப்பூசிகள் உள்ளன. அடுத்த மூன்று நாட்களில் 24,53,080 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இன்று காலை 7 மணி நிலவரப்படி இந்தியா முழுவதும் 28,00,36,898 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT