சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, கோவிட் காலத்தில் புதிய நம்பிக்கை ஒளியை யோகா ஏற்படுத்துகிறது என்று பேசினார்.
ஏழாவது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக வீடுகளில் இருந்தபடியே இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதன் முன்னோட்டமாக காணொலி வாயிலாக நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள், பிரபல யோகா ஆசான்கள், அனுபவம் வாய்ந்த யோகா நிபுணர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து ஒரு வார காலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஏழாவது சர்வதேச யோகா தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி காலை 6.30 மணிக்கு யோகாவால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:
இன்று சர்வதேச யோக தினம் கொண்டாடப்படுகிறது. ‛ஆரோக்கியத்திற்கு யோகா' என்பது தான் இந்தாண்டின் கருப்பொருள். இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
யோகா பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நம் முன்னோர்களும், சாதுக்களும் யோகாவை ஆரோக்கியத்தின் அளவீடாக கருதி வந்தனர்.
முன்பு போல் யோகா நிகழ்ச்சிகள் தற்போது கோவிட் காரணமாக நடத்தப்பட முடியவில்லை. டெல்லி உள்ளிட்ட இடங்களில் மத்திய அமைச்சர்கள் தங்களது வீடுகளில் யோகாசனங்களை செய்கின்றனர். அனைவரும் உடல் நலம் மற்றும் மனநலம் பெற வாழ்த்துகிறேன். கோவிட் நேரத்தில் யோகா புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துகிறது.
தெய்வப் புலவர் திருவள்ளுவர், நோய் நாடி முதல் நாடி அது தணிக்கும்வாய் நாடி வாய்ப்பச் செயல் எனக் கூறியுள்ளார்.
இந்த திருக்குறள் மூலம் ஒரு நோயின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து நாம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.
கண்ணுக்கு தெரியாத எதிரியான கோவிட்டை வெல்ல நாம் யோகாவை கடைப்பிடிக்க வேண்டும். யோகா நமக்கு உள் வலிமையை கூட்டுகிறது. உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டையும் அடிப்படை நோக்கமாக யோகா கொண்டுள்ளது. யோகா எதிர்மறை சக்தியுடன் எதிர்த்து போராட உதவுகிறது.
மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் யோகாவை தங்களின் பாதுகாப்பு ஆயுதமாக கடைப்பிடிக்க வேண்டும். நாம் அனைவரும் யோகா செய்வதன் மூலம் நாம் கோவிட் தொற்றிலிருந்து மீள முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.