ரயில்வே துறைக்கு 5 ஜி அலைவரிசை வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரயில் நிலையங்கள், ரயில் சேவை, மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பயன்பாட்டுற்காக ரயில்வே துறையில் 5ஜி அலைவரிசை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
ரயில் நிலையங்கள், ரயில் சேவை, மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பயன்பாட்டுற்காக ரயில்வே துறையில் 5ஜி அலைவரிசை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
5 ஜி அலைவரிசை மூலம் ரயில் ஓட்டுநர்கள் மற்றும் காவலர்களுடன் தடையற்ற தகவல்தொடர்புகளை உறுதி செய்ய முடியும். இதன் மூலம் பாதுகாப்பு மேம்படும்.
மேலும் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாவதை தடுப்பதற்காக உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு செயல் முறைக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ரயில் மோதல்களைத் தவிர்த்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
ரயில்வே துறையில் 5 ஜி அலைவரிசை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரயில்வேயில் தொலைதொடர்பு அமைப்பு மேம்படுவதுடன், ரயில் பயணம் பாதுகாப்பாக இருக்கும்.
தற்போது ரயில்வே ஆப்டிக்கள் பைபரை பயன்படுத்துகிறது. 5 அலைவரிசை கிடைப்பதன் மூலம், ரேடியோ தொலைதொடர்பு வசதி ரயில்வேக்கு கிடைக்கும். சிக்னல் நவீனமயமாக்கல் மற்றும் 5ஜி அலைவரிசை அமலாக்கத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.
ரூ. 25,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.