உணவு மாசு மூலம் நோய்கள் உருவாவது கவலை அளிப்பதாகவும் 2030-ம் ஆண்டுக்குள் உணவு மூலம் ஏற்படும் நோய்களின் பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் ஏற்பாடு செய்த சர்வதேச உணவு பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
விவசாய நிலம் முதல் உணவு மேசை வரையிலான ஒட்டுமொத்த உணவு சங்கிலியோடு உணவு பாதுகாப்பு இணைக்கப்பட வேண்டும். இதற்கான சமமான பொறுப்பை அரசு தொழில்துறை மற்றும் நுகர்வோர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்து கொள்கைகள் மற்றும் கல்வியின் முக்கிய கூறாக உணவு பாதுகாப்பு இருக்க வேண்டும். உணவு சங்கிலிகள் நீளமாக, சிக்கலாக மற்றும் சர்வதேசத்தன்மை வாய்ந்தவையாக உருவாகி வரும் வேளையில் உணவு மாசுபாடு மூலம் நோய்கள் உருவாவது கவலை அளிக்கிறது.
இதன் காரணமாக வருடத்திற்கு 15 பில்லியன் டாலர்கள் செலவாவதாகவும், 2030-ம் ஆண்டுக்குள் வருடத்திற்கு 150-ல் இருந்து 177 மில்லியனாக உணவு மூலம் ஏற்படும் நோய்களின் பாதிப்புகள் அதிகரிக்கும்.
உணவு பாதுகாப்பை உறுதி செய்து அதனோடு சார்ந்த சிக்கல்களை களைய அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.