இந்தியா

'சென்ட்ரல் விஸ்டா' திட்டம் பற்றி எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரம்: மத்திய அரசு விளக்கம்

செய்திப்பிரிவு

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில்ரூ.20 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால், உண்மை அதுவல்ல. இத்திட்டமானது 6 ஆண்டுகள் வரை நடைபெறும் திட்டமாகும். இதற்காக மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகைதான் ரூ.20 ஆயிரம் கோடி. கரோனா பரவல் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பே இந்த நிதிஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது.

தற்போதைய நிலவரப்படி, புதிய நாடாளுமன்றக் கட்டுமானத்துக்கு ஒப்பந்தத் தொகையாக ரூ.862 கோடியும், சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை புதுப்பிப்பதற்கான ஒப்பந்தத் தொகையாக ரூ. 477 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்ச் மாதம் வரையில் இந்த இரண்டு திட்டங்களுக்குமே சேர்த்து ரூ. 195 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருக்கின்றன.

பிரதமர் இல்லத்துக்கு மட்டும்ரூ.13,500 கோடி செலவிடப்படுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றிலும் உண்மையில்லை. சென்ட்ரல் விஸ்டாவில் கட்டப்படவுள்ள 10 கட்டிடங்களின் கட்டுமானத்துக்கு தான் இந்தத் தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பிரதமர் இல்லத்துக்கான ஒப்பந்தங்கள் இன்னும் கோரப்படவே இல்லை.

அதேபோல, கரோனா பரவலை தடுப்பதற்காக பெறப்படும் நிதி,சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்குமடைமாற்றம் செய்யப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. 2020-21-ம் ஆண்டு பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கும், மக்கள் நலனுக்காகவும் பல ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT