இந்தியா

கரோனா காலத்திலும் பாஜகவுக்கு அதிகார வெறி: உத்தவ் தாக்கரே கடும் தாக்கு

செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசை கவிழ்த்து விட்டு எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என இந்த கரோனா தொற்று காலத்திலும் பாஜக அதிகார வெறி பிடித்து அலைவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இணைய வழியாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த்தார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனா காலத்தில் உயிர்களை காப்பாற்றுவது தான் முக்கியம். மகாராஷ்டிர மாநிலம் கரோனாவால் கடுமையான பாதிப்பை சந்தித்து தற்போது மீண்டு வருகிறது. மக்களை கரோனாவில் இருந்து காப்பாற்ற நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் சில கட்சிகள் இந்த கரோனா காலத்திலும் (பாஜக) அதிகாரத்திற்கு வர நினைக்கிறார்கள். இந்த அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என செயலாற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறப்போவதில்லை. மக்கள் அவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.

இந்த கரோனா காலத்திலும் கூட அதிகார வெறிப்பிடித்து அலைவது, சட்ட ஒழுங்கை பாதிக்க வழிவகுக்கும். முதல்வராக வேண்டும் என்பது எப்போதும் எனது இலக்காக இருந்து இல்லை.

சிவசேனாவை சேர்ந்த தொண்டனை முதல்வராக்குவேன் என எனது தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நான் இன்னும் நிறைவேற்றவில்லை.

நான் அரசியலில் ஈடுபாடு கொண்டு வரவில்லை. தந்தைக்கு உதவியாக இருக்கவே அரசியலுக்கு வந்தேன். எனது ஆட்சியின் போது நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. பொறுப்புகளை விட்டு நான் ஓடியது கிடையாது. முதல்வராக என்னால் செய்ய முடிந்ததை செய்து கொண்டு இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT