கொச்சியில் இன்று பெய்த மழை 
இந்தியா

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் : தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

தென்மேற்குப் பருவ மழையால் ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக மழை பெய்யும். இதனால் நாட்டுக்கு அதிகமான மழைப் பொழிவைக் கொடுக்கும் மழையாக இந்தப் பருவ மழை கருதப்படுகிறது.
தென்மேற்குப் பருவ மழை வாயிலாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது.

கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம்தேதி தொடங்கும். இந்த ஆண்டு கேரளாவின் தெற்குப் பகுதிகளில் நேற்று (ஜூன் 3) தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதாக தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் அறிவித்தது.

இந்த ஆண்டு இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

இதுகுறித்து தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளதாவது:

தென்மேற்கு பருவமழை தீவிரமடைகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தெற்கு அரபிக் கடல், மத்திய அரபிக் கடலின் சில பகுதிகள், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.

கேரளாவில் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

இதன் காரணமாக தமிழகம் , புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும், நாட்டின் பிற மாநிலங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று முதல் 8ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

அப்போது மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், சிக்கிம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அசாம் மற்றும் மேகாலயாவில் வரும் 8ம் தேதி கனமழை பெய்யும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT