பொது சிவில் சட்டத்தை இயற்ற கோரி தாக்கல் செய்த பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருமணம் மற்றும் விவாகரத்து விஷயங்களில் ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு விதிமுறைகளை பின்பற்றுகின்றனர். இதனால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக முஸ்லிம் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர். இதை தடுக்க நாட்டில் பொது சிவில் சட்டம் (காமன் சிவில் கோட்) இயற்ற நாடாளுமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் என்பவர் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. ‘‘இந்தப் பிரச்சினை குறித்து முடிவெடுக்க வேண்டியது நாடாளுமன்றம்தான். இதில் தலையிட முடியாது’’ என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.மேலும், பாரபட்சமாக நடத்தப்படுவதால் பாதிக்கப்படும் பெண்கள், புகார் கொடுக்க முன்வராததது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.