இந்தியா

அசாம் மாநிலத்தில் பணியில் இருந்த மருத்துவரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்: ஐஎம்ஏ வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வாரம்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரதுஉறவினர்கள், அங்கிருந்த மருத்துவர் சியுஜ் குமார் சேனாபதியை கடுமையாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த விவகாரம் குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ)தலைவர் ஜே.ஏ.ஜெயலால் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தங்கள் உயிரை கூட பொருட்படுத்தாமல் மக்களுக்காக ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் உழைத்து வருகின்றனர். தங்கள் குடும்பத்தையும் மறந்து இரவு பகலாக நோயாளிகளுக்கு அவர்கள் சிகிச்சை அளிக்்கின்றனர்.

இவ்வாறு, கரோனா முன்களப்பணியாளர்களில் முதன்மையானவர்களாக விளங்கும் மருத்துவர்கள் மீது நாட்டின் பல்வேறுபகுதிகளில் தாக்குதல் நடத்தப்படுவது வேதனையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களால் மருத்துவர்கள் அச்சத்திலும், கவலையிலும் ஆழந்துள்ளனர்.

அசாமில் மருத்துவர் மீது நோயாளிகளின் உறவினர் கள் தாக்குதல் நடத்தியதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், மருத்துவர்களின் நலன் பாதுகாக்கப்படுவதை நம்மால் உறுதி செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அசாமில் மருத் துவரை தாக்கியதாக 24 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT