பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த சதவீதம்  91.60% ஆக உயர்வு

செய்திப்பிரிவு

நாடுமுழுவதும் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த சதவீதம் 91.60% ஆக பதிவாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கரோனா பாதிப்பு சரிந்து வரும் நிலையில், 50 நாட்களுக்குப் பிறகு, அன்றாட புதிய பாதிப்புகள் 1.52 லட்சமாகக் குறைந்துள்ளது.

தொடர்ந்து நான்காவது நாளாக, தினசரி பாதிப்புகள் இரண்டு லட்சத்திற்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,52,734 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதேபோல கரோனா தொற்றுக்கு நம் நாட்டில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து, 20,26,092 ஆக இன்று பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 88,416 குறைந்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட மொத்த பாதிப்புகளில் தற்போது சிகிச்சை பெறுவோரின் சதவீதம் வெறும் 7.22% ஆகும்.

தொடர்ந்து 18-வது நாளாக, புதிதாக பாதிக்கப்படுபவர்களை விட, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,38,022 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

புதிதாகக் குணமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்குமான இடைவெளி 85,288 ஆக உள்ளது. பெருந்தொற்றின் தொடக்கம் முதல் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,56,92,342 ஆகும். இதன் மூலம் குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த சதவீதம், 91.60% ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 16,83,135 பரிசோதனைகளும், இதுவரை இந்தியாவில் மொத்தம் 34.48 கோடி பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி வீதம்‌ 9.04 சதவிகிதமாகவும், தினசரி தொற்று உறுதி வீதம் 9.07 சதவிகிதமாகவும் சரிந்துள்ளது. இந்த விழுக்காடு, ஏழு நாட்களாகத் தொடர்ந்து 10 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 21.31 கோடிக்கும் அதிகமானோருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்டத் தகவலின்படி, 30,28,295 முகாம்களில், மொத்தம் 21,31,54,129 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT