கேரளாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் சிறுபான் மையினருக்கான கல்வி உதவித் தொகை முறையே 80:20 என்ற அளவில் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கேரள அரசு ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், கல்வி உதவித் தொகை சதவீதம் மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி கேரளாவில் 26.56 சதவீதம் முஸ்லிம்களும் 18.38 சதவீதம் கிறிஸ்துவர்களும் இதர சிறுபான்மையினர் 0.33 சதவீதமும் உள்ளனர். சிறுபான்மையினர் என்ற பிரிவை தனியாக எடுத்துக் கொண்டால் அதில் 58.67 சதவீதம் முஸ்லிம்களும் 40.06 சதவீதம் கிறிஸ்துவர்களும் உள்ளனர். எனவே, அதன் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இப்போது வழங்கப்படும் 80:20 சதவீதம் செல்லாது என்று கூறி இது தொடர்பாக மாநில அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும், கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது. - பிடிஐ