இந்தியா

மணமேடையில் மாப்பிள்ளைக்கு விநோத நிபந்தனை: ஹரியாணா திருமணத்தில் பரபரப்பு

ஐஏஎன்எஸ்

கல்வி பயில முடியாத 11 பெண்களுக்கு கல்வி உதவி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஹரியாணாவில் நடந்த திருமணத்தில் மணப்பெண் முன் வைத்ததால் அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

ஹரியாணா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள பிலாவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பூனம். இவர் ஆசிரியரின் மகள் ஆவார். பிவானி அரசு கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்ற பூனம் மாணவர்களுக்கு இலவசமாக வீட்டு வகுப்பு நடத்தி வருகிறார்.

இந்நிலையில் பூனமுக்கும் கஜ்ஜார் கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் குமாருக்கும் திருமணம் கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண சடங்குகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் குறுக்கிட்ட பூனம் தனது கழுத்தில் தாலி ஏறும் முன்பு குமாருக்கு ஒரு நிபந்தனை விதிக்க உள்ளதாகவும் அதற்கு ஒப்புக்கொண்டால் தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் கூறினார்.

இதனால் திருமண நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. கல்வி பயில இயலாத 11 சிறுமிகளுக்கு சந்தீப் குமார் கல்வி உதவி அளிக்க வேண்டும் என்று பூனம் கூறினார். இதற்கு உடனடியாக சந்தீப் ஒப்புதல் அளித்த நிலையில் திருமணம் சுமூகமாக நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியில் நடந்த இந்த விநோதச் சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்த போதிலும் மணமக்களை நினைத்து பெருமிதம் கொண்டனர்.

SCROLL FOR NEXT