வங்கிகளில் நிறுவனங்களுக்கு கடன் பெறுவதற்கு ஜாமீன் அளித்ததனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திவால் மசோதாவில் தனிநபர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை தொடர்பான மனு நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ் மற்றும் ரவீந்திர பட் ஆகியோரடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வங்கிகளுக்கு தனி நபர்கள் அளித்த ஜாமீன் என்பது அவர்களுக்குள்ள பொறுப்புகளை தட்டிக் கழிப்பதாக இருக்கக்கூடாது. எனவே இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையை வங்கிகள் தொடரலாம் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை செயல்படுத்துவதை நிறுத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய அரசு அறிவிக்கையை அடிப்படையாகக் கொண்டு 75-க்கும் மேலான மனுக்கள் விசாரணைக்கு காத்திருப்பதாகவும், இதில் அரசின் அறிவிக்கையின் அடிப்படையில் செயல்படுவதா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
திவால் மசோதா தொடர்பாக நவம்பர் 15, 2019-ல் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையை எதிர்த்து மனுதாரர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை எடுக்கும்போது ஜாமீன் அளித்த தனி நபர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
நிறுவனங்களை மறு சீரமைக்க மேற்கொள்ளப்படும் திவால்நடவடிக்கையின்போது நிறுவனங்களுக்கான கடன் பொறுப்புகள் மட்டுமே ஆராயப்படும். அதில் நிறுவனங் களுக்கு ஜாமீன் அளித்த தனி நபர்கள் வங்கிகளுக்கு அளித்த உத்தரவாதம் எந்த வகையிலும் சம்பந்தப்பட்டதல்ல எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.