உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் பகுதியில் இருந்து தெரியும் இமயமலைச் சிகரங்கள். 
இந்தியா

காற்று மாசு குறைந்துள்ளதால் தொடர்ந்து 2-வது ஆண்டாக - உ.பி.யில் இருந்தே தெரியும் இமய மலை: சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலானது

செய்திப்பிரிவு

தொடர்ந்து 2-வது ஆண்டாக உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து இமய மலைச் சிகரங்களைப் பார்க்க முடிகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.

வழக்கமாக இமயமலைக்கு அருகிலுள்ள மாநிலங்களில் இருந்து இமயமலையை காண முடியாது. பனிமூட்டம், காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் காண முடியாத நிலை இருந்தது.

ஆனால் கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்து உ.பி.யின் பல்வேறு நகரங்களில் இருந்து இமயமலைச் சிகரங்களைக் காண முடிந்தது.

இந்நிலையில் 2-வது ஆண்டாக தற்போது உ.பி.யின் சஹாரன்பூரில் இருந்து இமயமலைச் சிகரங்களை காண முடிகிறது. இந்த நகரிலிருந்து இமயமலைச் சிகரங்கள் வெறும் கண்களால் பார்க்க முடிகிறது. உ.பி.யின் வேறு சில நகரங்களில் இருந்து இமயமலைச் சிகரங்கள் தெரிகின்றன.

சஹாரன்பூரைச் சேர்ந்த டாக்டர் விவேக் பானர்ஜி என்பவர் இந்த புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து விவேக் பானர்ஜி கூறும்போது, “இது ஓர் அரிய காட்சி. இமயமலை சிகரங்களை சஹாரன்பூர் வடக்குப் பகுதியில் இருந்து வெறும் கண்களிலேயே காண முடிகிறது. மிகவும் தெளிவாக சிகரங்கள் தெரிகின்றன. 30 முதல் 40 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற காட்சிகள் இங்கு தெரிந்ததாம். தற்போது அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுவால் அந்தக் காட்சிகள் தெரிவதில்லை. தற்போது சிகரங்கள் தெரிந்ததால் அதை படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன்” என்றார்.

          
SCROLL FOR NEXT