நாரதா டேப் வெளியான வழக்கில் மேற்கு வங்கத்தில் ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசில் அமைச்சர்கள் இருவரையும், எம்எல்ஏக்கள் இருவரையும் சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
மேற்கு வங்கப் போக்குவரத்து மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி இருவரும், எம்எல்ஏ மதன்மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள நாரதா இணையதளம் 2016ஆம் ஆண்டு ஒரு ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தியது. அதில் போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆதரவாக நடந்து கொள்வதற்குப் பணம் பெற்றனர். இந்தக் காட்சியை நாரதா நிறுவனம் ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் வெளிக்கொண்டு வந்தது.
2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக நாரதா விவகாரம் விஸ்வரூபமெடுத்ததால் மம்தா தேர்தலில் தோல்வி அடைவார் என்று பேசப்பட்டது. ஆனால், எதிர்ப்புகளையும், அதிருப்திகளையும் மீறி மம்தா பானர்ஜி தேர்தலில் வென்றார்.
இந்த நாரதா வீடியோ டேப் விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் நடந்தபோது அமைச்சர்களாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிர்ஹத் ஹக்கீம், சுப்ரஜா முகர்ஜி, மதன் மித்ரா, சோவன் சாட்டர்ஜி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த 4 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சமீபத்தில் மே.வங்க ஆளுநர் தனகரிடம் சிபிஐ அனுமதி கோரியிருந்தது. அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சிபிஐ அதிகாரிகள் குழுவினர், அமைச்சர் ஹக்கிம் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் என 4 பேரையும விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணைக்குப் புறப்படும் முன், அமைச்சர் ஹக்கிம் நிருபர்களிடம் கூறுகையில், “ நாரதா வழக்கில் சிபிஐ என்னைக் கைது செய்துள்ளது. இதை நாங்கள் நீதிமன்றத்தில் முறைப்படி எதிர்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள் இருவர், ஒரு எம்எல்ஏ கைது செய்யப்பட்ட செய்தி அறிந்தவுடன் முதல்வர் மம்தா பானர்ஜி, உள்ளிட்ட திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் கொல்கத்தா நிஜாம் பேலஸில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர்.