கோப்புப்படம் 
இந்தியா

அதிகரிக்கும் கரோனா; சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

ஏஎன்ஐ

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கும், சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் குறைவில்லாமல் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர்.

இதையடுத்து, கடந்த ஏப்ரல் 14ம் தேதி நடைபெற இருந்த 10-ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்து சிபிஎஸ்இ அறிவித்தது, அதைத் தொடர்ந்து சிஐஎஸ்சிஇ அறிவித்தது. ஆனால், 12ம் வகுப்புத் தேர்வுகளை மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ அறிவித்தன.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறையாத சூழலில் 12ம்வகுப்பு தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் அந்த தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

வழக்கறிஞர் மம்தா சர்மா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லாதது. ஆன்-லைனில் அல்லது நேரடியாக தேர்வு மையத்துக்கு வந்து தேர்வு எழுத மாணவர்களை எழுதச் செய்வதும் கடினமானது,

ஏனென்றால் எப்போதுமில்லாத சூழலை சந்தித்து வருகிறோம். 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்தாமல் தள்ளிப்போடுவதும், முடிவு ஏதும் எடுக்காமல் இருப்பதும் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்பும்பட்சத்தில் அது கல்வியைப் பாதிக்கும்.

ஆதலால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அப்ஜெப்டிவ் முறையில் முடிவுகளை அறிவிக்க வேண்டும். 12 தேர்வுகள் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் தொடர்ந்து தாமதம் செய்வது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.

10-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, 12-ம் வகுப்புத் தேர்வுகள் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது மாணவர்களுக்கு மனஉளைச்சலை அதிகரிக்கும். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன், தன்னிச்சையாக, மனிதநேயமற்ற முறையில் எந்த முடிவும் எடுக்காமல் அப்பாவி மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடக் கூடாது.ஆதலால், 12ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கும், சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும்

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT