இந்தியா

நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு 22 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் வழங்க எல் அண்ட் டி திட்டம்

செய்திப்பிரிவு

கரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாகிவரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் சவாலாக உருவெடுத்துவருகிறது. இந்நிலையில், முன்னணி உட்கட்டமைப்பு நிறுவனமான எல் அண்ட்டி ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய 22 ஜெனரேட்டர்களை மருத்துவமனைகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த ஜெனரேட்டர்கள் காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்துமருத்துவமனையில் குழாய்கள் வழியாக நோய் பிரிவு அறைகளுக்குக் கொண்டு செல்லும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக எல் அண்ட் டி நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து எல் அண்ட் டி நிறுவன சிஇஓ எஸ்.என்.சுப்ரமண்யம் கூறும்போது, “முற்றிலும் எதிர்பாராத நெருக்கடி நிலையில் இருக்கிறோம். ஆக்சிஜன் பற்றாக்குறையினால் ஏற்படுகிற உயிரிழப்புகளைப் பார்க்கையில் மிகுந்த வலி உண்டாகிறது. எனவே எல் அண்ட் டி நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தி ஜெனரேட்டர்களை உருவாக்கும் முயற்சியிலும், ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்புக்கான உபகரணங்களைத் தயார் செய்வதிலும் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு 22 ஆக்சிஜன் ஜெனரேட்டர் யூனிட்டுகள் வழங்க திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

முதல்கட்டமாக 9 ஜெனரெட்டர்கள் மே 9-ம் தேதி இந்தியா வந்து சேரும் என்றும், மே 15-க்குப் பிறகு ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளுக்கு இவை தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும் எல் அண்ட் டி நிறுவனம் கூறியுள்ளது.

SCROLL FOR NEXT