ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு வாகனங்களில் மாநிலக் கொடியை பறக்க விட வேண்டும் என அம்மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் கவுரத்தை அவமதிப்பதை தடுக்கும் சட்டம் 1979-ன் படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி ஹஸ்னைன் மசூடி இது தொடர்பான வழக்கில் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.
மக்கள் பிரதிநிதிகள் தங்களது வாகனங்கள், அலுவலகங்கள், அரசு அலுவலகங்களில் மாநிலக் கொடியை பறக்க விடலாம் என அரசு வெளியிட்ட சுற்றறிக்கையை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
தேச விடுதலைக்காக மக்களின் போராட்டங்களை அடையாளப் படுத்துவதாக கொடி இருக்கிறது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் நீதிபதி குறிப்பிட்டார். மாநில கொடி என்பது, அரசமைப்பு தன்னாட்சி என்ற அமைப்பின் ஒரு முக்கியக் கூறு, இறையாண்மையின் எச்சம் என எந்தப் பெயரில் அழைத்தாலும் அது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான உரிமை எனவும் நீதிபதி தெரிவித்தார்.
கடந்த மார்ச் 12-ம் தேதி மாநில அரசு அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், மாநிலக் கொடியை அரசு தொடர்பான அனைத்து விழாக்களிலும், வாகனங்களிலும் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததால், மற்றொறு சுற்றறிக்கை மூலம் அந்த உத்தரவை திரும்பப் பெற்றது.
இதுதொடர்பாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்றது. முந்தைய சுற்றறிக்கை திரும்பப் பெற்றதற்கு அரசு காரணம் கூறவில்லை எனக் கூறிய நீதிபதி, அனைத்து அரசு வாகனங்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலகங்களில் மாநிலக் கொடியை ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து காரணமாக, அம்மாநிலத்துக்கு தனி கொடி உள்ளது. தேசியக் கொடி யுடன் தன் மாநிலக் கொடியையும் ஏற்ற ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும் அனுமதி உள்ளது.