உலகின் சிறந்த மருந்து தொழிற்சாலைகளை கொண்ட இந்தியாவில் கரோனா தொற்று இந்த அளவு உயரத்தை அடைந்திருக்கக் கூடாது என்று உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி வருகிறது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை 9% பேருக்கு மட்டுமே தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது,
இந்த நிலையில் நாட்டின் பல மாநிலங்களில் தடுப்பு மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனைத் தொடர்ந்து தடுப்பு மருந்து தயாரிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், தடுப்பு மருந்து செலுத்துவதை பரவலாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து கவுஷிக் பாசு தனது ட்விட்டர் பக்கத்தில், “ கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா, அமெரிக்கா, பிரேசில், துருக்கி ஆகிய நாடுகளில் கரோனா தொற்று அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் செலுத்துவதில் நீண்ட வரலாற்றையும், உலகின் சிறந்த மருந்தக தொழிற்சாலைகளையும் கொண்ட இந்தியாவில் தொற்று இந்த அளவு உயரத்தை அடைந்திருக்க கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.