போதுமான அளவு தடுப்பூசி இல்லாவிட்டால், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. மோடி அரசின் அகங்காரம், திறமையின்மையால் நோய்தொற்றால் மக்களும், பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 1.52 லட்சம் பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கரோனா தடுப்பூசியை 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே மத்திய அரசு தற்போது செலுத்தி வருகிறது. ஆனால், அனைத்து வயதினருக்கும் செலுத்த வேண்டும், தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ட்விட்டரில் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில் “ தடுப்பூசி போதுமான அளவில் இல்லாவிட்டால், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. வேலைவாய்ப்பு இல்லை, தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நிவாரண உதவி இல்லை, குறு,சிறு,நடுத்தர தொழில்களுக்கு பாதுகாப்பில்லை, நடுத்தரக் குடும்பத்தினரும் மனநிறைவுடன் இல்லை. மாம்பழம் சாப்பிடுவது சரிதான், ஆனால், குறைந்த பங்களிப்பை சாமானிய மனிதருக்கு வழங்கிட வேண்டும்” எனத் தெரிவி்த்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “கரோனா வைரஸ் இந்தியாவின் பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்க்கையிலும் தொடர்ந்து ஓர் ஆண்டாக பாதிப்பை ஏற்படுத்தி வருவது தொடர்கிறது. மோடி அரசின் அகங்காரம், திறமையின்மைக்கு அனைத்துக்கும் நன்றி.
மோடி அரசின் தவறான கொள்கைகளால் சமூகத்தில் ஒவ்வொரு தளத்தில் உள்ள மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். கரோனா வைரஸ் தடுத்து நிறுத்த முடியாத வேகத்தில் பரவி வருகிறது. தடுப்பூசியில் பற்றாக்குறை இருக்கிறது, விவசாயிகள், தொழிலாளர்கள் இடர்பாடுகளைச் சந்தித்துள்ளார்கள்.
பொருளாதாரம் சீர்குலைந்து வருகிறது, சிறுவர்த்தகங்கள் மூடப்பட்டு வருகின்றன, நடுத்தரக் குடும்பத்தினர் ஆழ்ந்த கவலையில் இருக்கிறார்கள்” எனக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.