கரோனா வைரஸ் 2-வது அலையின் தீவிரம் அதிகரித்து வருவதால், 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து நாடுமுழுவதும் ஒரே மாதிரியான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால்,. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்த வேண்டும் எனக் கோரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்டு மனுக்கள் மூலம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் சிபிஎஸ்இ நிர்வாகமோ, “ மாணவர்கள் உரிய சமூக விலகலைக் கடைபிடித்து அமர்ந்து தேர்வு எழுத வசதி செய்யப்படும். தேர்வு மையங்கள் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. கரோனா காலத்தில் தேர்வுகளை எழுத மாணவர்களை கட்டாயப்படுத்தும் சிபிஎஸ்இ வாரியத்தை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு சிவசேனா கட்சியின் செய்தி்த்தொடர்பாளர் அரவிந்த் சாவந்த் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுயிருப்பதாவது:
“ கரோனா காலத்தில் எந்த மாநில அரசாவது ஒருதலைபட்சமாக 10, 12ம் வகுப்புத் தேர்வுகளில் முடிவு எடுத்தால், அது மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.
எந்த மாநில அரசாவது ஒருதலைப்பட்சமாக முடிவு எடுப்பதைத் தடுக்கவும், தேசியஅளவில் கருத்தொற்றுமையை உருவாக்க நீங்கள் தலையிட வேண்டும், 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் என்ற வேறுபாடு பார்க்காமல், மாணவர்களின் பாதுகாப்பு, வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு நாடுமுழுவதும் ஒரே மாதிரியான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
மகாரஷ்டிராவில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில கல்வி வாரியம், ஐபி மற்றும் ஐஜிசிஎஸ்இ என பல்வேறு கல்வி வாரியங்கள் இயங்குகின்றன. ஆதலால், 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் குறித்து தெளிவான முடிவை, மத்திய கல்வித்துறை எடுத்து அறிவி்க்க வேண்டும்.
ஏப்ரல்-மே மாதங்களில் தேர்வு தொடர்பாக ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறார்கள். இந்த இளைஞர்களின் வயதுக்கு தடுப்பூசியும் போடமுடியாது, அதற்கான வழியும் மத்திய அரசு விதிமுறைகளில் இல்லை.
தேர்வு நேரத்தில் மாணவர்களுடன் பெற்றோர் செல்லும் போது அவர்களும், ஆசிரியர்களும், ஆசிரியர் பணியில் இல்லாதவர்களும் கரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பல மாணவர்களும், ஆசிரியர்களும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்து வருகிறார்கள், அவர்களுக்கென தனியாக வாகன வசதிகளும் செய்வதும் கடினம். இதைக் கருத்தில் கொண்டு ஒரேமாதிரியான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும்
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.