45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மத்திய அரசு பணியாளர்களும் கோவிட்-19 தடுப்பூசியை விரைந்து எடுத்து கொள்ள வேண்டும் என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளா்.
கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்த பணியாளர் மற்றும் பயிற்சி துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங் நேற்று ஆய்வு செய்தார்
அப்போது பேசிய அவர், 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மத்திய அரசு பணியாளர்களும் கோவிட்-19 தடுப்பு மருந்தை விரைந்து எடுத்து கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய அரசு பணியாளர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டார்.
வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கு பணியாளர் மற்றும் பயிற்சி துறை உருவாக்கியுள்ள செயல்முறை மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது என்று கூறிய அமைச்சர், அரசு அலுவலர்கள் ஆன்லைன் மூலம் வேலை நாட்களிலும், விடுமுறை தினங்களிலும் பணிபுரிவதால், பல நேரங்களில் பணித்திறன் சாதாரண சமயங்களை விட அதிகமாக இருந்ததாக குறிப்பிட்டார்.
தடுப்பு மருந்து பெற்றுக் கொண்டதற்கு பின்னரும் அடிக்கடி கைகளை கழுவுதல், முகக் கவசத்தை பயன்படுத்துதல், சமூக இடைவெளியை பேணுதல் போன்ற சரியான கோவிட் நடத்தை முறைகளை அரசு பணியாளர்கள் பின்பற்ற வேண்டுமென்று ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டார்.
பணியாளர் மற்றும் பயிற்சி துறை செயலாளர் தீபக் காந்தேகர், மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் செயலாளர் இந்தேவர் பாண்டே, மத்திய செயலாளர் மற்றும் நிறுவன அலுவலர் கே ஸ்ரீனிவாசன், மற்றும் மத்திய செயலாளர் அலோக் ரஞ்சன் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.