திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். கரோனா பரவல் அதிகரித்து வருவதால் சர்வ தரிசன டோக்கன்கள் தினமும் 22 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக குறைக்கப்பட்டது. நடைபாதையில் செல்வோரும், முந்தைய நாள் டோக்கன் பெற்று, மறுநாள் மதியம் 1 மணிக்கு பிறகு மலையேற அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில், வரும் 14-ம் தேதி முதல் வழக்கம் போல் சுப்ரபாதம், கல்யாண உற்சவம் உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இந்த முடிவை தற்போது தேவஸ்தானம் மாற்றிக் கொண்டது. கரோனா 2-வது அலை அதிகரிப்பதால், ஆர்ஜித சேவைகளில் பக்தர்களின் பங்கேற்பை தற்காலிகமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது. இதனால், சுவாமிக்கு அனைத்து சேவைகளும் ஏகாந்தமாகவே நடைபெற உள்ளது.
வரும் 13-ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை கொண்டாப்பட உள்ளது. இதனையொட்டி, 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை திருமலையில், கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையில், ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள் மீண்டும் பணியில் சேர திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.