அசாம் மாநிலத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல்1ம்தேதி) 39 தொகுதிகளுக்கான 2-ம் கட்டத் தேர்தல் நடைபெறுவதையடுத்து, இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது.
இந்தத் தேர்தலில், அசாம் அமைச்சர்கள் பியூஷ் ஹசாரிகா, பரிமால்சுக்லா பைதியா, பாபேஷ் கலிதா, துணை முதல்வர் லஸ்கர் என முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
39 தொகுதிகளில் மொத்தம் 345 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 73,44,631 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் அமைச்சர் பைதியா பாஜக சார்பில் 7-வது முறையாகத் தோலை தொகுதி போட்டியிடுகிறார்.
இந்த 39 தொகுதிகளில் 15 தொகுதிகள் பாரக் பள்ளத்தாக்குப் பகுதியில் வருகிறது, இதில் பெரும்பாலான எல்லைகள் வங்கதேசத்துடன் இணைக்கின்றன என்பதால் முக்கியமான பகுதியாகும்.
இந்த 15 தொகுதிகளும் காங்கிரஸ், பாஜகவின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியத் தொகுதிகளாக இருக்கும். கடந்த 2016-ம் ஆண்டில் பாஜக இந்த 15 தொகுதிகளில் 8 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத்தில் 47 தொகுதிகளுக்குக் கடந்த 27-ம் தேதி தேர்தல் முடிந்தது, மொத்தம் 79 சதவீதம் வாக்குப்பதிவானது.
இந்தத் தேர்தல் பாஜக, அசாம் கனபரிஷத் (ஏஜிபி) கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஏஐயுடிஎப் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி ஆகியவற்றை அமல்படுத்துவோம் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியோ என்ஆர்சி, சிஏஏ இரு சட்டங்களையும் அமல்படுத்தமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நடந்து முடிந்தபின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.