கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என மலையாள மனோரமா -விஎம்ஆர் நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாஜக தனித்து போட்டியிடுகிறது.
2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி களம் கண்டன. ஆனால் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் உள்ள வலிமை மிக்க ஈழவ சமூகம் சார்ந்த அரசியல் அமைப்பான பாரத் தர்ம ஜனசேனாவுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. 15.8 சதவீத வாக்குகளுடன், ஓரிடத்தில் பாஜக வென்றது.
கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில் இந்த முறை தனது வாக்கு வங்கியை காண்பிக்கும் நோக்குடன் பாஜகவும் களமிறங்கியுள்ளது.
இந்தநிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. கேரளாவில் ஏற்கெனவே 3 கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் இடதுசாரி கூட்டணியே வெற்றி பெறும் என 3 கருத்துக்கணிப்புகளும் தெரிவித்து இருந்தன.
இந்தநிலையில் மலையாள மனோரமா மற்றும் விஎம்ஆர் நிறுவனமும் இணைந்து கேரள சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:
யாருக்கு எவ்வளவு இடங்கள்?
மொத்த இடங்கள்: 140
இடதுசாரி கூட்டணி: 77- 82
காங்கிரஸ் கூட்டணி: 54 -59
பாஜக கூட்டணி: 0-3
மற்றவர்கள்: 0-1
----------
வாக்கு விவரம்
இடதுசாரி கூட்டணி: 43.65%
காங்கிரஸ் கூட்டணி: 37.37%
பாஜக கூட்டணி: 16.46%
மற்றவர்கள்: 2.52%
------------------
முதல்வர் வேட்பாளர்
முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு கேரள மக்கள் அளித்துள்ள பதில்:
பினராயி விஜயன் (சிபிஎம்: 39%
உம்மன் சாண்டி (காங்): 26%
ஷைலஜா (சிபிஎம்): 12%
ரமேஷ் சென்னிதலா (காங்) : 11%
சுரேந்திரன் (பாஜக): 5%
மத்திய அமைச்சர் முரளிதரன் (பாஜக: 3%
மற்றவர்: 4%