இந்தியா

மருமகள், 3 பேரன்கள் மர்ம மரணம்: முன்னாள் காங்கிரஸ் எம்பி ராஜய்யா கைது

என்.மகேஷ் குமார்

தெலங்கானா மாநிலம் வாரங்கல் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்பி சிரிசில்லா ராஜய்யாவின் மருமகள், மற்றும் 3 பேரன்கள் நேற்று அதிகாலை மர்மமான முறையில் தீயில் கருகி பலியாயினர். இது தொடர்பாக ராஜய்யா, அவரது மனைவி, மகன் ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. சிரிசில்லா ராஜய்யா வேட் பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், ஹைதராபாத் தில் உள்ள ஹன்மகொண்டா ரெவின்யூ காலனியில் உள்ள இவரது வீட்டின் மேல் மாடியில் வசித்து வந்த இவரது மருமகள் சாரிகா பேரன்கள் அபிநவ் (7), இரட்டையர்களான அயோன், யோன் ஆகிய 4 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

நேற்று அதிகாலை 4 மணி யளவில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்தபோது, சாரிகாவின் கணவர் அனில் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. தகவல் அறிந் ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், முன்னாள் எம்.பி ராஜய்யா, அனில் மற்றும் பணியாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

குடும்ப பிரச்சினையால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டாள் என சாரிகாவின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில், ராஜய்யா, அவரது மனைவி மாதவி, மகன் அனில் ஆகியோரை போலீ ஸார் நேற்று கைது செய்தனர்.

இதனால் வாரங்கல் இடைத் தேர்தலில் ராஜய்யாவுக்கு பதில் காங்கிரஸ் சார்பில் சர்வே சத்ய நாராயணா போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்தது. இதை யடுத்து அவர் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

          
SCROLL FOR NEXT