செவ்வாய் தோஷத்தை காரணம் காட்டி 13 வயது சிறுவனை, பள்ளி ஆசிரியை ஒருவர் மணந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகிலுள்ள பஸ்தி பவா கேல் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் தன்னிடம் டியூஷன் படித்த 13 வயது மாணவனை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
அந்த ஆசிரியைக்கு செவ்வாய் தோஷம் இருந்துள்ளது. ஜோசியர்களுடன் ஆலோசனை நடத்தியதில் தன்னை விட வயது குறைவான ஒருவரை திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகிவிடும் என்று அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் தன்னிடம் படித்த 13 வயது சிறுவனை அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆசிரியை யின் வீட்டிலேயே ரகசியமாக திரு மணம் நடந்துள்ளது. அனைத்து சடங்குகளையும் செய்த பெண் வீட்டார், பின்னர் முதல் இரவையும் நடத்தி முடித்துள்ளனர்.
மறுநாள் அவர் விதவை யாகிவிட்டதாகக் கூறி அவரது வளையல்களை உடைத்து ஒப்பாரியும் வைத்துள்ளனர். சிறுவன் வீடு திரும்பி பெற்றோரிடம் தகவலைச் சொன்னதும் பஸ்தி பவா கேல் காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.
அதற்குள் அந்த ஆசிரியை சிறுவனின் வீட்டுக்குச் சென்று பெற்றோரை சமாதானம் செய்துள்ளார். இதையடுத்து புகாரை சிறுவனின் பெற்றோர் வாபஸ் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது இரு குடும்பத்தாரும் சமாதானம் செய்துகொண்டதால் புகார் வாபஸ் பெறப்பட்டது என்றனர். 13 வயது சிறுவனை பள்ளி ஆசிரியை திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.