இந்தியா

மகாராஷ்டிரா, தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

செய்திப்பிரிவு

மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய 5 மாநிலங்களில் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில், 26,291 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 78.41 சதவீதம் பேர் மேற்கண்ட 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 16,620 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 1,792 பேருக்கும், பஞ்சாப்பில் 1,492 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 2,19,262.

மற்றொருபுறம், இந்தியாவில் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கியுள்ளது. இன்று காலை 7 மணி வரை 2,99,08,038 பேர் கொவிட் தடுப்பூசி போட்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 82,92,193 பேர் கோவிட் தடுப்பூசி போட்டுள்ளனர்.

58வது நாளான நேற்று 1,40,880 தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்தியாவில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,10,07,352-ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் 96.68 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 17,455 பேர் குணமடைந்துள்ளனர். 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT