நூர்பினா ரஷீத் 
இந்தியா

கேரளாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளரை களம் இறக்கிய முஸ்லிம் லீக்

என்.சுவாமிநாதன்

கேரள சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யுடிஎப்) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி(ஐயுஎம்எல்) அங்கம் வகிக்கிறது.

இந்த தேர்தலில் ஐயுஎம்எல்-க்கு 27 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 25 தொகுதிக்கான வேட் பாளர் பட்டியலை ஐயுஎம்எல் வெளியிட்டுள்ளது. இதில் கோழிக்கோடு தெற்கு தொகுதி வேட்பாளராக நூர்பினா ரஷீத் அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சி யின் பொதுச் செயலாளர் குஞ்ஞாலிக்குட்டி, தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேங்கரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கமாருண்ணிசா அன்வர் என்ற பெண்ணுக்கு ஐயுஎம்எல் வாய்ப் பளித்தது. அவர் மார்க்சிஸ்ட் வேட்பாளரிடம் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அதன் பின்னர் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் நூர்பினா அந்த வரலாற்றை மாற்றியிருக்கிறார். வழக்கறிஞரான நூர்பினா முஸ்லிம் லீக்கில் மாநில மகளிர் குழுவின் பொதுச்செயலாளராக இருந்தவர். மாநில மகளிர் ஆணைய உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இதுகுறித்து நூர்பினா ரஷீத் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறும் போது, ‘‘கடந்த 1980-களில் குற்றவியல் துறை சார்ந்து கேரளாவில் வழக்கறிஞராக இருந்த முஸ்லிம் பெண் நான் மட்டுமே. தொடர்ந்து மக்கள் பணி செய்த அனுபவத்தில்தான் ஐயுஎம்எல் மகளிர் பிரிவை தூணாக இருந்து உருவாக்கினேன். ஐயுஎம்எல் அரசியல் விவகாரக் குழுவில் உள்ள ஒரே பெண் உறுப்பினரும் நான்தான். கட்சி என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். பெரிய வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT