இந்தியா

நாட்டில் 42 தீவிரவாத அமைப்புகளுக்கு தடை: மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்து மூலம் அளித்த பதில்:

நாட்டில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட 42 தீவிரவாத அமைப்புகளுக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் பல, நாட்டின் எல்லைப் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2018 முதல் 2020-ம் ஆண்டு வரை ஜம்மு-காஷ்மீரில் 635 தீவிரவாதிகள் நமது பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மட்டும் 115 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் அப்பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் குறைந்துள்ளது.காஷ்மீரில் 2019-ல் 594 முறை தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இது 2020-ல் 244-ஆகக் குறைந்துள்ளது. 2019-ல் 157 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2020-ல் 221 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மற்றொரு கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், "கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 61 முறையும், இந்தியா-வங்கதேச எல்லைப் பகுதியில் 1,045 முறையும், இந்தியா-நேபாள எல்லைப் பகுதியில் 63 முறையும் ஊடுருவல் முயற்சி நடந்துள்ளது" என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT