இந்தியா

பெட்ரோல் விலை ரூ.100; நீங்கள் ரூ. 21 லட்சம் கோடி வசூலிப்பது நியாயமா?’’- மத்திய அரசு மீது கார்கே சரமாரி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100யை தொட்டுவிட்டது. ஆனால் அரசு இதன் மூலம் 21 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கிறது, இதனை கணிசமாக குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை குறையும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே புகார் தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும், 2-வது அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 29-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் இரு அவைகளிலும் நடந்தது. இந்நிலையில் 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது. கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு வழக்கம் போல் மாநிலங்களவை காலை நேர அமர்விலும், மக்களவை மாலையும் திட்டமிடப்பட்டு இருந்துது. அதுபோலவே மாநிலங்களவை இன்று காலை கூடியது. கருத்தடை திருத்த மசோதா உள்ளிட்டவை இன்று தாக்கல் செய்யப்பட இருந்தது.

அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவையின் மைப்பகுதிக்கு சென்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, முதல் நாளிலேயே கடுமையான நடவடிக்கைகளை தாம் எடுக்கவிரும்பவில்லை எனக் கூறினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, முதல் நாளிலேயே கடுமையான நடவடிக்கைகளை தாம் எடுக்கவிரும்பவில்லை எனக் கூறினார்.

இதனால் அவையில் அமளி நிலவியது. காங்கிரஸ் எம்.பி,க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவை கூடியதும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினை குறித்து பேசினார். அவர் கூறியதாவது:
பெட்ரால் விலை 100 ரூபாயை தொட்டு விட்டது. டீசல் விலை 80 ரூபாய்க்கு அதிகமாக விற்கிறது. சமையல் காஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி மூலம் நாடுமுழுவதும் 21 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனை கணிசமாக குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை குறையும்’’ எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெட்ரால், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து கடும் அமளி நீடித்ததால் அவையை பிற்பகல் 1 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT