கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது, அதை நீக்க வேண்டும் எனக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திட்டங்களை வகுத்து பிரச்சாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகப் பிரச்சார யுத்திகளை வகுத்துச் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரோனா தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழில் பிரதமர் மோடி படம் இருப்பதை நீக்க வேண்டும் எனக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்(டிஒய்எப்ஐ) தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மிதுன் ஷா, தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் " மாநிலத்தில் தேர்தல் நடத்தைவிதி முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டு சான்றிதழ் பெறும் போது அதில் பிரதமர் மோடியின் புகைப்படமும், அவர் பேசிய வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி புகைப்படம் இருப்பது, வாக்காளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். ஆதலால், தேவையான நடவடிக்கைகளை எடுத்து நீக்க வேண்டும்.
கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டபின், எனக்கு அளிக்கப்பட்ட சான்றிதழில் மோடியின் புகைப்படம் இருந்ததால், இந்த புகாரைத் தெரிவிக்கிறேன். நான் பெற்ற சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம், அவரின் வார்த்தைகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். தேர்தல் நடத்த விதிகளை மீறியதாக இருப்பதால் இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் உள்ள பெட்ரோல் நிலையங்களில், பிரதமர் மோடி உருவப்படம் இருக்கும் விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள், பதாகைகளை நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.