இந்தியா

மேற்கு வங்கத்தில் அதிக கவனம் செலுத்தும் பாஜக: சுமார் 800 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க தேசிய தலைவர்கள் திட்டம்

ஆர்.ஷபிமுன்னா

மே.வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதனால் மே.வங்கத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரம் முன்கூட்டியே சூடுபிடித்துள்ளது.

மார்ச் 27-ல் தொடங்கி 8 கட்டங்களாக நடைபெறும் மே.வங்க தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பாஜக தேசிய தலைவர்களின் பிரச்சாரக் கூட்டம் திட்டமிடப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 800 கூட்டங்கள் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.

இதில் பிரதமர் நரேந்திர மோடிமார்ச் 7 ல் தொடங்கி 20 கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார். மத்திய அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தலா 60 கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர். மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பாஜகவின் பிற தேசிய தலைவர்களின் கூட்ட எண்ணிக்கை 700-க்கும் அதிகமாக திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறும்போது, “மேற்கு வங்க வெற்றியின் மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் எங்கள் கட்சியின் முதல் வெற்றியாக அது அமையும். எனவே, பிரதமர் மோடி உட்பட அனைவருமே தேவைக்கு ஏற்ப கூட்ட எண்ணிக்கையை அதிகரிக்கத் தயாராக உள்ளனர். இதற்காக பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்தும் தொண்டர்களை அழைக்க உள்ளோம்” என்று தெரிவித்தனர்.

தற்போது தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களும் இந்தி பேசாத மாநிலங்கள் ஆகும். அசாம் தவிர மற்ற நான்கிலும் பாஜக ஆட்சி செய்ததில்லை. எனவே, இந்த 5 மாநில தேர்தல் பாஜகவுக்கு பெரும் சவாலாக உள்ளது.

அசாமில் 2-வது முறையாக பாஜகவை ஆட்சியில் அமர்த்த பிரதமர் மோடி 7 கூட்டங்களில் கலந்துகொள்கிறார். மற்ற 3 மாநிலங்களான தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே நாளில் மூன்று கூட்டங்கள் நடத்தும் திட்டத்துடன் 5-க்கும் மேற்பட்ட முறை பயணம் மேற்கொள்கிறார் மோடி.

பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் 5 மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இதில் உ.பி.முதல்வரான யோகி ஆதித்யநாத் அதிக கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இவர் முதல்முறையாக தமிழக தேர்தல் பிரச்சாரத்திலும்கலந்துகொள்ள திட்டமிடப்படுகிறது.

SCROLL FOR NEXT