இந்தியா

‘‘பிஹாரில் கரோனா தடுப்பூசி முற்றிலும் இலவசம்’’ -நிதிஷ் குமார் அறிவிப்பு

செய்திப்பிரிவு

பிஹாரில் அனைவருக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும், தனியார் மருத்துவமனையிலும் இதனை பெற்றுக் கொள்ளலாம், அதற்கு மாநில அரசே ஏற்பாடு செய்யும் என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாடுமுழுவதும் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

இந்தப் பணிகள் முடியும் தறுவாயில் இருப்பதையடுத்து, 2-வது கட்டமாக மார்ச் 1ம் தேதியான இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

இதில் நீரிழிவு நோய்கள், கடந்த ஓராண்டாக இதயக்கோளாறு நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்ட 20 இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி நாடுமுழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் தகுதி படைத்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிஹாரில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் கூறியதாவது:

பிஹார் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. பிஹாரில் அனைவருக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். தனியார் மருத்துவமனையிலும் இதனை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வசதியை பிஹார் மாநில அரசே செய்து தரும்.

60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. மக்கள் தானாக முன் வந்து முறைப்படி பதிவு செய்து கரோனா தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT